ஞானத்திருவடி (ஏப்ரல் 2009) | திருக்குறள் – வெஃகாமை | புண்ணிய செயல்கள் எவை?

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

உள்ளடக்கம்

  • 1. திருக்குறள் – வெஃகாமை ……..
  • 2. புண்ணிய செயல்கள் ……..
  • 3. ஜீவகாருண்ய ஒழுக்கம்-தொடர் ………
  • 4. மகான் கடுவெளிச்சித்தர் ஆசிநூல்- V.T.பரணீதரன் ….. 17
  • 5. மகான் கடுவெளிச்சித்தர் பாடல்கள் …….
  • 6. வாசகர் கடிதங்கள் ………
  • 9. ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால்-தொடர்…….
  • 10. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள்

வெளியீடு
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,
ஓங்காரக்குடில்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
0 04327 - 255184, 256525, 255784.

மகான் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி

வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்                                                      171

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்                                                        172

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்                                                      173

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்                                                   174

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்                                                       175

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்                                                                   176

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்                                                                     177

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின், வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்                                                      178

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன் அறிந்தாங்கே திரு                                                                  179

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு                                                      180

ஞானத்திருவடி தந்த அரங்கா போற்றி 
ஞானமாய் வீற்றிருக்கும் அரசா போற்றி 
ஞானிகளின் திருவடிபற்றிய தேசிகா போற்றி 
ஞானியேநின் திருவடிகள் போற்றி போற்றி 

திருவடி நூலை திங்கள் தோறும் வெளியிடுவாயே 
தெய்வநூல் திருமறை நூல் ஞானத்திருவடிநூலே 
திருமகளின் கடாட்சம் தரும் அற்புத நூலே 
திருவடி நூல் தொட்டவர்கள் கடாட்சம் பெற்றார்

பெற்றிடுவார் ஞானசித்தி ஆசியுண்டு 
பெரும்பேற்றை அடைந்தவராவார் ஆசியுண்டு 
பெற்றுமே நாள் தோறும் நூலை படிப்போர் 
பெருந்தவத்தை புரிந்திட்ட பலனை பெறுவார்

- மகான் கடுவெளிச்சித்தர் ஆசிகாண்டம் 

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற் இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 33 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். ஆகவே இந்த மாத இதழை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்து ஞானிகளின் ஆசிபெற வேண்டுகிறேன்.

அன்புடன்,

இரா.மாதவன்.

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு 
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின் அருளுரை

திருக்குறள்
வெஃகாமை - அதிகாரம் 18 

வெஃகாமை என்பது யாதெனில்,நம்முடைய தகுதிக்கு மீறிய ஒன்றை செய்வதும் அல்லது தகுதிக்கு மீறிய ஒரு பொருளை விரும்புவது முறையல்ல.
அதனால் பெரிய கேடுகள் உண்டாகும்.
அதிக விலைமதிப்புள்ள ஓர் பொருளை பொருளுக்குரியவனின் சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் அவனை வஞ்சித்து அந்தப் பொருளை பெறுவது பாவம் ஆகும். பொருளுக்குரியவன் மனம்
வெதும்பினால் ஏமாற்றியவன் பெரும் பழியை ஏற்பான்.எளியவர்களின் பொருளை தன்னுடைய செல்வ பலத்தாலோ,அதிகார பலத்தாலோ அவனை அச்சுறுத்தி பொருளை கைப்பற்றுவது
தவறானது.
 ஒரே வீட்டுமனையை பலரிடம் காட்டி அதனை விற்று பொருள் ஈட்டுவது நீதிக்குப் புறம்பான செயலாகும்.

தன் தகுதிக்கு மீறி அழகுடனும் பொருளுடனும் உள்ள பெண்ணைத்
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு
உண்டு. அத்தகைய மனப்பான்மை தவறானதே.அத்தகைய எண்ணங்களால் ஏமாற்றங்களும் பல பிரச்சினைகளும் உண்டாகி விரும்புகின்றவனின் தாய் தந்தையருக்கும் குடும்பத்தினருக்கும் தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். 

சிலருக்கு நல்ல அறிவு நுட்பம் இருக்கும். ஆனால் பிறர் பொருளை ஏமாற்றி கைப்பற்றும் குணம் இருக்கும். எத்தகைய திறமை அவர்களிடத்தில் இருந்தாலும் அவையாவும் பயன் இல்லாதவையே. ஏமாற்றி பொருள் பறிக்கும் தன்மை இல்லாத பண்பே உயர்ந்த பண்பு. அதுவே நல்லறிவு.

கடவுளைப் பற்றி அறிந்தவன் உண்மையை அறிந்திருப்பான். உலக நீதியை அறிந்திருப்பான்.அத்தகையவன் பிறர் பொருளை அபகரிக்க மாட்டான். பிறர் பொருளை விரும்புகின்றவனிடம் அறம் இல்லை .
 
தலைவனைப் பற்றி அறிந்தவன் அறத்தைப் பற்றி அறிந்தவனாக இருப்பான். தூய்மையாக வாழ்பவனிடம் செல்வம் சேரும். அவ்வாறு சேர்ந்த பொருளை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்துவான். 

பல இடங்களில் அரசாங்கத்தை ஏமாற்றி கள்ள நோட்டு, கள்ள நாணயம் செய்து வெளியிடுகின்றார்கள். இத்தகைய பேராசையால் வாழ்க்கை அழிந்து அதனால் குடும்பமும் அழியும்.

தன்னுடைய தேவைக்கும் பொருளை பயன்படுத்தாமல், பிறருக்கும் அதனை கொடுக்காமல் சேர்த்து வைக்கின்ற பொருள் எதிர்காலத்தில் பாதுகாப்பும் உரிமையும் இல்லாமல் தவறான வழிக்குப் பயன்படும்.

சமுதாயத்தில் பொருளாதாரம் என்பது பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது சாவாமைக்கு மருந்தல்ல. சிறப்பறிவு உள்ளவர்கள் புண்ணியத்தை செய்தும் உண்மைப் பொருள் அறிந்தவர்களின் திருவடியை பூஜை செய்தும் சாகாவரத்தைப் பெறுவார்கள்.

அறத்திற்குட்பட்டு சேருகின்ற பொருள் மீண்டும் அறத்தை நிலைநாட்டவே பயன்படும். பிறர் வருந்தும்படி பொருள் சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அமைதி கெடும். செய்கின்ற செலவினங்களைச் சுருக்கிக் கொள்ளுதல் நல்லது. நம் வருவாய்க்கேற்றவாறு செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.ஆடம்பரமான வாழ்க்கையை வாழ நினைப்பதும் பிறரால் போற்றப்பட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி செலவு செய்வதும் மிகுந்த அல்லலுறும் நிலையை ஏற்படுத்தி விடும்.

வெற்றியின் உச்சிக்கு சென்றவர்களுக்கு நிதானம் வேண்டும்.
பொருளாதாரத்தைக் கண்டு மயங்கக் கூடாது. பொருளாதாரத்தை கண்டுமயங்காதவன், யாருக்கும் தலைவணங்காத வீரனாக இருப்பான். 

அன்பிற்கு மட்டுமே தலைவணங்குவான். அவனே மாபெரும் பேரறிவாளன். அவன் தலைவனின் ஆசியையும் அருளையும் பெற்றிருப்பான். 

பொருளாதாரத்தைக் கண்டு மயங்குபவன் சுயநலம் உள்ளவனாக இருப்பான். 

பிறருக்குப் பசியாற்றுபவன், ஜீவகாருண்யத்தை கடைபிடிப்பவன், தலைவனை உருகி பூஜை செய்பவன் எத்தகைய சூழ்நிலையிலும் பிறர் பொருளைக் கவரமாட்டான். 

துறவு மேற்கொள்பவர்கள் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால் அவர்களின் தவம் கெட்டு பாவமூட்டை அதிகமாகும். 

பூஜை புண்ணியம் செய்த மக்கள் பிறருக்கு உதவி செய்வதால் தங்களுடைய ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள். பூஜை புண்ணியமே ஒரு மனிதனுக்கு சாகா மருந்து. மரணத்தை வென்றவர்களின் திருவடியைப் பற்றிக் கொள்வோம்; சாகாவரத்தை பெறுவோம். 

உண்மை பக்தியே உயர்த்தும் உன்னை . பக்தி செலுத்தினால் பாவங்கள் பொடியாகும். பக்தி செலுத்தினால் பண்புகள் ஓங்கும். பக்தி செலுத்தினால் பண்பு ஈதென்று அறியலாம். பக்தி செலுத்தினால் பகைமையை நீக்கலாம். பக்தி செலுத்தினால் பக்குவம் உண்டாகும். பக்தி செலுத்தினால் மன்னிக்கும்
குணம் உண்டாகும்.

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, 
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அவர்கள் அருளிய 
புண்ணிய செயல்களின் விவரம்

 1. தாய்- தந்தை செய்த உதவிகளை நன்றி மறவாது அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதே புண்ணியமாகும். 

2.மனைவி அறிந்தோ அறியாமலோ செய்த மன்னிக்கக்கூடிய குற்றங்களை மன்னித்து மறப்பது புண்ணியமாகும்.
 
3. ஒருவரிடம் வேலை வாங்கும் போது அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதும் புண்ணியமாகும்.
 
4.உற்ற நண்பர்களுக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்வது புண்ணியமாகும். விருந்தை உபசரித்து அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்வதும் புண்ணியமாகும். 

5. நமக்கு மனது சோர்வு இருந்தாலும், நம்மை நோக்கி வரும் அன்பர்களிடம் இனிமையாக பேசுவதும் புண்ணியமாகும்.
 
6. வரவுக்கு உட்பட்டு செலவு செய்ய வேண்டுமென்ற எண்ணமும்
புண்ணியமாகும்.
 
7. ஜாதிதுவேசம் பார்க்காமல் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று எண்ணி அன்பு காட்டுவது புண்ணியமாகும். 

8. நாம் பேசும்பொழுது நமது பேச்சால் மற்றவர்கள் மனம் புண்படாது இருக்க வேண்டுமென்று நினைப்பது புண்ணியமாகும். 

9. நம்மீது பகை கொண்டவர்கள் நம்மிடம் வரும்பொழுது நாம் பகை உணர்வை வெளிப்படுத்தாது இனிமையாக பேசுவது புண்ணியமாகும். 

10. எப்பொழுதும் உடன்பாடு உள்ளவர்களிடம் மனம்விட்டு பேசுவது
எல்லோருக்கும் இயல்புதான். நம்மிடம் முரண்பாடு உள்ளவர்களிடம்
மனம்விட்டு பேசி பகைமையை நீக்கிக்கொள்வது புண்ணியமாகும். 

11. புண்ணியவானாகிய ஆசான் அகத்தீசரை தினமும் பூஜித்து வருவதும் புண்ணியமாகும். இயற்கை அன்னை நமக்கு தானியங்களையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும், பல்வேறு கனிகளையும் கொடுத்திருக்கின்றாள். மேலும் கிழங்கு வகைகளையும், ஆங்கில காய்கறிகளான காளிபிளவர், பீன்ஸ், கேரட், பீட்ரூட், சௌசௌ இன்னும் பல கொடுத்தும் இந்த உணவுவகைகள் போதாது என்று மற்ற உயிர்களை கொன்று அந்த உடம்பை உண்ணாதிருப்பது புண்ணியமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய அறிவே தெளிவில்லாமல் இருப்பதால் மேலும் போதை பொருட்களும் மற்றும் மதுபானம் அருந்தி அறிவை மாசுபடுத்திக்கொள்ளாதிருப்பதும் புண்ணியமாகும். 

12. மனித வர்க்கம் அத்தனையும், கடவுளால் படைக்கப்பட்டதாகும். எனவே, உள்ளும், புறமும் வேற்றுமையில்லாமல், சமமாக மதிப்பவர்கள் மனிதர்களில் தெய்வமாகும். அவர்களை கண்டு தரிசிப்பதே புண்ணியமாகும். 

13. ஒருசிலர் குளிக்கும் போதோ அல்லது படுக்கும்பொழுதோ தங்கச்சங்கிலி, கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவைகளை எப்பொழுதும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல், மாற்றி வைத்துவிட்டு மற்றவர்கள் மேல் பழிசுமத்துவார்கள். மேலும், தம் வீட்டில் பொருள் காணாமல் போனால், சம்மந்தம் இல்லாதவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள். மேலும், காவல் துறையில் புகார் கொடுப்பார்கள். எதையும் நிதானித்து முடிவெடுப்பதே புண்ணியமாகும்.
 
14. அறப்பணி செய்வோருக்கு வீடு அவசியம்தான். அதற்காக பெரிய வீடாக கட்டி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல் இருப்பதும் புண்ணியமாகும். 

15. திருக்குறள், திருமந்திரம், திரு அருட்பா , திருவாசகம் போன்ற
அறநூல்களை பயபக்தியுடன் தொடுவதும், படிப்பதும் புண்ணியமாகும்.

16. சாலையில் செல்லும் காலத்தில் ஆணி, உடைந்த கண்ணாடிகள், கற்கள், முட்கள், வாழைப்பழத் தோல் போன்றவை கிடக்கும். இதை
அப்புறப்படுத்துவதும் புண்ணியமாகும்.
 
17. கண்ட இடங்களில் சுகாதாரகேடு வரும்படி அசுத்தம் செய்யாதிருப்பதும் புண்ணியமாகும்.

18. ஆண்களை படைத்த அதே கடவுள் தான் பெண்களையும்
படைத்திருக்கிறான். பெண்களை மதித்து நடப்பதே புண்ணியமாகும்.
 
19. எல்லாம்வல்ல பரப்பிரம்மமாகிய மெய்ப்பொருளை அறியாத மூடர்களை காணாதிருப்பதும் புண்ணியமாகும்.
 
20. மெய்ப்பொருளை கற்றுணர்ந்த ஞானிகளுக்கு தொண்டு செய்து ஆசி
பெறுவது புண்ணியமாகும்.
 
21. பிறப்பென்னும் பேதைமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண
ஆசான் அகத்தீசரின் ஆசிபெறுவது புண்ணியமாகும்.
 
22. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கு தீமைகள் நீங்கி வாழ்வது புண்ணியமாகும்.

23. பொருளின் இயல்பே நிலையில்லாதது என்று அறிந்து பொருள் இருக்கும் பொழுதே அறப்பணி செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வது புண்ணியமாகும். 

24. நாம் காணுகின்ற அத்தனையும் அழியக்கூடியது என்று அறிந்து அதை கண்டு மயங்காது தெளிவடைவது புண்ணியமாகும். 

25. நாம் காணுகின்ற பொருள்களில் உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு. அதில் உண்மையை மட்டும் காண்பது புண்ணியமாகும்.  

26. இந்த உடம்பு பொய்தான். அதில் உண்மைப்பொருள் இருப்பது அறிந்து அந்த உண்மைப்பொருளாக தாம் ஆகிவிடுவது புண்ணியமாகும்.
 
27. ஆன்ம லாபம் அடைய விரும்புபவர்கள் உண்மை பொருளை உணர்ந்த ஆசானை தேடி அலைவார்கள். அவர்களுக்கு உண்மை பொருள் உணர்ந்த ஆசான் கிடைத்தால் அதுவும் புண்ணியமாகும். 

28. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தீயநட்போடு சேர்ந்திருந்தாலும் அந்த நட்பு நம்மை விட்டு நீங்கி விடுவது புண்ணியமாகும். 

29. குடிப்பழக்கம், சூதாடும்பழக்கம் போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதும் புண்ணியமாகும். 

30. சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்கள் விரும்பினால் மறுமணம் செய்துவைப்பது புண்ணியமாகும். 

31. வியாபாரம் செய்யும்பொழுது நாம் விற்கக்கூடிய பொருட்களை நியாயமான விலைக்கு விற்பது புண்ணியமாகும். 

32. குடும்பத் தலைவன் தன் மனைவியின் தாய், தந்தையாகிய மாமன், மாமிக்கு பாதுகாவலராக இருப்பது புண்ணியமாகும். அதே போல, குடும்பத் தலைவி தன் கணவனுடைய தாய், தந்தையாகிய மாமன், மாமி மகிழும்படி நடந்துகொள்வது புண்ணியமாகும். 

33. நமக்கு தக்க சமயத்தில் உதவி செய்தவர்களை சாகும்வரை
மறவாதிருப்பதும் புண்ணியமாகும். 

34. உண்மை பொருளறிந்த ஆசானுக்கு பண்புள்ள சீடன் அமைந்தால் அதுவும் புண்ணியமாகும். 

35. தகுதியுள்ள நண்பர்கள் சில சமயத்தில் அறியாமையால் குற்றம்
செய்தாலும், அதை அனுசரித்து நடப்பதும் புண்ணியமாகும். 

36. நமது செயல்பாடுகள் மற்ற உயிர்கள் மகிழ்ச்சியடையும்படி இருந்தால் அதுவும் புண்ணியமாகும்.

37. நமக்கு துன்பம் வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவி
செய்தவர்களுக்கு நாம் பெற்ற கடனை திரும்ப கொடுத்துவிடுவது புண்ணியமாகும்.
 
38. நமக்கு வீடு இல்லாத காலத்திலும், வியாபாரத்திற்கு கடை இல்லாத காலத்திலும், வாடகைக்கு வீடும் கடையும் கொடுத்து உதவியவர்களுக்கு அவர்களுக்கு தேவையான காலத்தில் கடை மற்றும் வீட்டை காலி செய்து கொடுப்பதும் புண்ணியமாகும்.

39. நமது வீட்டில் டேப்ரெக்கார்டர், ரேடியோ, டி.வி பயன்படுத்தும் காலத்தில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் சத்தம் அதிகம் என்று சொன்னால், சத்தத்தை குறைத்து வைத்துக்கொள்வது புண்ணியமாகும்.
 
40. நாம் பேருந்தில் செல்லும் காலத்தில் கர்ப்பஸ்திரீகள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், கையில் குழந்தையோடு நின்று பயணம் செய்கின்றவர்களுக்கு நாம் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டுக்கொடுப்பது புண்ணியமாகும்.
 
41. நமது வீட்டில் உள்ள பசு அல்லது எருமை பால் கறக்கும் முன்னர்
கன்றுக்கு பால்விட்டு கறப்பது புண்ணியமாகும்.
 
42. தாய்ப்பால் இல்லா குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்ப்பால் போல
பாதுகாப்பதால் நாம் பசுவை பாதுகாப்பது புண்ணியமாகும்.
 
43. கடவுளால் படைக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி மற்றும் ஜீவராசிகளை கடவுளுக்கே வெட்டி பலி கொடுப்பது பாவமாகும். அதுபோன்ற காரியங்கள் செய்யாதிருப்பது புண்ணியமாகும்.
 
44. நாம் கற்றறிந்த உண்மையை மற்றவர்களுக்கு மனதில் பதியுமாறு
சொல்வதும் புண்ணியமாகும்.
 
45. நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள் அனைத்தும் பிறரால்
பழிக்கப்படாதிருப்பது புண்ணியமாகும்.
 
46. ஆசான் சுப்ரமண்யர் மேல் பக்தி கொண்டவர்களுக்கும், சமூக
சான்றோர்களுக்கும் உதவி செய்வது புண்ணியமாகும்.
 
47. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது பாவமாகும்; கலப்படம்
செய்யாதிருப்பது புண்ணியமாகும்.
 
48. சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்களை சுப காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், சுபகாரியங்களுக்குச் செல்லும் காலத்தில் அவர்கள் எதிரே வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சுபகாரியங்கள் தடைபடும் என்றும் சொல்வது கருணை இல்லாத செயல்களாகும். அவ்வாறு அவர்கள் மனம் புண்படும்படி பேசாதிருப்பது புண்ணியமாகும்.
 
49. உண்மைப் பொருள் உணர்ந்த ஆசான் நமக்கு மனமுவந்து உபதேசித்தால் அது அளவில்லா புண்ணியமாகும்.
 
50. மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணம் மும்மலமாகிய
களிம்புதான். களிம்பு அற பாடுபடுவது புண்ணியமாகும்.
 
51. கடவுளால் செய்யப்பட்ட திருக்குறளை தொட்டு வணங்குவதும், படிப்பதும், அதை பரப்புவதும் புண்ணியமாகும்.

மேற்கண்ட அனைத்து புண்ணிய செயல்களுக்கும் ஆசான் அகத்தீசர் ஆசி இருக்க வேண்டும். மேற்கண்ட புண்ணிய செயல்களை செம்மையாக செய்து முடிக்கவேண்டுமென்றால் புலால் மறுத்தல், உயிர்கொலை தவிர்த்தல் மற்றும் விருந்தை உபசரித்தல் மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் ஆசான் அகத்தீசரை தினமும் காலை, மாலை 30 நிமிடம் ஓம் அகத்தீசாய நம என்று நாமஜெபமாகிய பூஜை செய்து ஆசிபெறவேண்டும்.

ஆகவே, ஆசான் அகத்தீசரை பூஜிப்போம்,
ஆசிபெற்று இன்புற்று வாழ்வோம்.  

அகத்தீசன் திருவிழா அன்னதான பெருவிழா 
சித்ராபௌர்ணமி விழா அழைப்பிதழ் வரும் 08.05.09 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் வராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு 
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்களின் தலைமையில் சித்ரா பௌர்ணமி விழா, ஓங்காரக்குடில் மகான் அகத்தியர் அன்னதான மண்டபத்தில் நடைபெற உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். அது சமயம் விழாவில் கலந்துகொண்டு முதுபெரும் தலைவர் சுப்ரமணியர் அருளையும், ஆசான் அகத்தீசர் ஆசியையும், குருநாதர் அவர்கள் ஆசியையும் பெற்றுக கொளளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம், 
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.

அருட்பெருஞ்ஜோதி                                            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                          அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய

இராமலிங்க சுவாமிகள் அருளிய திருஅருட்பா

சுத்த சன்மார்க்க விளக்கத்தின் முதற்பிரிவாகிய

ஜீவகாருண்ய ஒழுக்கம்

  1. பசியினால் வரும் துன்பத்தை நீக்குதலும், கொலையினால் வரும் துன்பத்தை நீக்குதலும் ஜீவகாருண்யத்திற்கு முக்கிய லட்சியமாக இருக்கவும், இவ்விடத்தில் பசி நீக்குதலை மாத்திரம் அடிக்கடி வலியுறுத்துவது ஏன்? எனில் –

ஒரு ஜீவன், பசியால் கொல்லப்படுமென்பதை அறிந்து காருண்யத்தால் பசியை நீக்கி உயிர் பிழைக்கும்படி செய்பவர், வேறு வகையால் உயிர்க்கொலை நேரிட்டால் அதற்கிரங்கி அந்தக் கொலையால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்யாமலிரார்கள், கொலையால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்யாதவர்கள் பசியால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விக்கத்தக்க தயவுடையவர்களாகார்கள். பசியால் வருங்கொலையை, ஆகாரத்தாலன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது, பகை முதலியவற்றால் வருங்கொலையை அநேக உபாயத்தால் நிவர்த்தி செய்விக்கக் கூடுமாதலால், கொலையால் வருந்துன்பத்தைப் பசியால் வருந்துன்பத்தில் அமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்ற தென்றறிய வேண்டும்.

அன்றியும், தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும், பசிவருத்த முண்டாகும் போது அவ்வவ்வருத்தங்களை யெல்லாம் மறந்து பசி வருத்தம் மேற்பட்டு ஆகாரந் தேட முயற்சி செய்கின்றார்கள்.

அன்றி, அரசன் ஆக்கினையால் கொலைக் குற்றம் பற்றிக் கொலை செய்ய விதிக்கப்பட்ட குற்றவாளியும், பசி வந்த போது தன் பயத்தையுந் துன்பத்தையும் மறந்து அந்தப் பசியை மாற்றிக்கொள்ள முயலுகிறான்.

வைத்தியரால் தாம் இறந்துவிடுவது நிச்சயமென்று தெரிந்து கொண்ட வியாதியாளரும், மூப்பாளரும் பசி வந்தபோது தமது துன்பத்தை மறந்து, பசி நீக்க முயலுகின்றார்கள்.

பசிக்குத் தயவினால் ஆகாரங் கொடுக்கத் துணிந்தவன் வேறு வகையால் ஜீவர்கள் இம்சைப் பட்டழிவதற்குச் சம்மதிக்கவே மாட்டான்; ஆதலாலும், பசியால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கின்ற தருமத்தை அடிக்கடி வலியுறுத்துவ தென்றறிய வேண்டும்.

  1. பசியினால் வருங்கெடுதி எல்லா ஜீவர்களுக்குந் தேகநாசஞ் செய்வது உண்மையானால், எல்லா ஜீவர்கள் பசியையுமறிந்து நிவர்த்தி செய்விக்க வேண்டும். அப்படி நிவர்த்தி செய்விக்கத் தொடங்கில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட தேவர், மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாபரம் என்கின்ற இவ்வெழுவகைப்பட்ட அளவிறந்த பேதங்கள் உடைய ஜீவர்களது பசியை அறிந்து நீக்குவது அசாத்தியமாகுமோ? என்னில் –

தேவர்கள், மனித சுதந்திரத்தினும் மேற்பட்ட சுதந்திர முடையவர்களாய்த் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத்தக்க வல்லபமுடையவர்களாதலால், அவர்கள் பசியைக் குறித்து மற்றவர் யோசிப்பது அவசியமல்லவென்றும், தேவர்களுக்கும் பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமேயென்று இரங்குவது மாத்திரம் அவசியமென்றும்;

நரகர் நாம் பசியாற்றுவிக்கத்தக்க இடங்களில் இல்லாமல் வேறிடங்களிலிருக்கின்றபடியாலும், நரகர் பசிக்குத் தண்டனைப் பரிவாரங்களால் பசியாற்று வித்தலாலும், அந்நரகர் பசியைக்குறித்து யோசிப்பது அவசியமல்லவென்றும், அந்நரகரும் பசி நேரிடில் வருந்துவார்களே யென்று இரங்குவது மாத்திரம் அவசியமென்றும்;

ஊழ் வகையினால் சிறிதும் சுதந்திரமில்லாத, மரம், புல் முதலிய தாவரங்களில் மனிதர் தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் முயற்சியால் விளைவிக்கின்ற தாவர வர்க்கங்களுக்குப் பசி குறித்து நீர் விடுவது அவசியமென்றும், மற்றைத் தாவர வர்க்கங்களெல்லாம் அருள் நியதியின்படி ஆகாரங் கொடுப்பிக்க உயிர்த்திருக்கின்றன ஆதலாலும், அவைகளுக்கெல்லாம் பசியறிந்து ஆகாரங் கொடுப்பது நமது சுதந்திரமல்ல, கடவுள் சுதந்திரமென்றும், அவை குறித்து யோசிப்பது அவசியமல்லவென்றும், ஆகாரமில்லாவிடில் வருந்துமேயென்று இரங்குதல் மாத்திரம் அவசியமென்றும்நிலத்திலும், நீரிலும் ஊருகின்ற உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் அவ்வவற்றின் ஊழ் வகைக்குத் தக்கபடி அருள் நியதி ஆகாரங் கொடுப்பிக்க, உண்டு பசியாறுகின்றன வென்றும், அவ்வவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்திரமல்ல, கடவுள் சுதந்திரமென்றும், அவைகளில் மனிதர் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் சுதந்திரத்தால் சம்பாதித்துக் கொள்ளுகின்ற பசு, எருது, எருமைக்கடா, ஆடு, குதிரை முதலிய சில மிருகங்களுக்கு ஆகாரங்கொடுத்துப் பசியாற்றுதல் அவசியமென்றும்;

மனிதர்களில், ஆண்மக்கள், பெண்மக்கள் என்றிரு வகைப்பட்ட எல்லா மனிதர்களுக்கும், பசியால் வரும் நஷ்டங்களும், துன்பங்களும், பசி நிவர்த்தியால் வரும் லாபங்களும், இன்பங்களும் பொதுவில் ஒரு தன்மையாயிருத்தலாலும்; பசியால் வரும் நஷ்டங்களையுந் துன்பங்களையும் மனம் முதலான அந்தக்கரண விருத்தியினாலும் கண் முதலான இந்திரியங்களாலும், மிகவும் அறிந்து கொள்கின்ற ஆன்ம அறிவு ஒத்திருத்தலாலும், மனிதர்களுக்கு ஊழ் வகையினால் அருள் நியதியின்படி கொடுப்பிக்கின்ற ஆகாரமட்டில் ஜீவித்துத் தேகத்தை வைத்திருக்கக் கூடாமையாலும், தங்கள் முயற்சியாலும் அறிவாலும் சுதந்தரத்தாலும் சம்பாதிக்கின்ற, ஆகாமிய ஆகாரத்தாலும், பசியை நீக்கித் தேகத்தை வைத்திருக்க வேண்டுமாதலாலும், ஆகாமியத்தால் சம்பாதிக்கின்ற ஜீவ சுதந்திரம் மனிதர்களுக்கு அருளால் மிகவுங் கொடுக்கப்பட்ட படியாலும், ஊழ்வகையால் ஆகாரம் நேரிடாமல் பசித்து வருந்தும்படியாகவும், அந்தப் பசியை நீக்கும் நிமித்தம் ஒருவரையொருவர் எதிர்பார்க்கும் படியாகவும், அவர் தயவினால் ஆகாரங் கொடுத்து அப்பசியை நீக்கி அவரை நன் முயற்சியிற் செலுத்தவும், ஆகாரங் கொடுத்தவர் சித்தி முத்திகளையடையவும், அருள் நியதியாக விதிக்கப்பட்ட படியாலும்;

மனித தேகம் மற்ற ஜீவ தேகம் போல இலேசிலே எடுக்கக்கூடாதாகலாலும், மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும், மிகவும் விளங்குதலாலும், இந்த மனித தேகம் போனால் மீளவும் இந்தத் தேகம் வருமென்கிற நிச்சயமில்லாமையாலும், இந்த மனித தேகம் முத்தியின்பம் பெறுதற்கே எடுத்த தேகமாதலாலும், இந்த மனித தேக மாத்திரமே முதற்சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும், மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்க வேண்டுமென்றும் கடவுள் விதித்திருக்கின்றபடியால், பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்.

  1. ஊழ்வகைக்குத் தக்கபடி மிருகம், பறவை முதலிய ஜீவர்களுக்கு அருளால் நியதி ஆகார மாத்திரம் இருக்க, மனிதர்களுக்கு மாத்திரம் ஊழ் நியதி ஆகாரத்தோடு , ஆகாமிய முயற்சி ஆகாரமும் வேண்டுவது அவசியமென்றது எப்படி? என்னில்

மனிதர்கள் பிராரத்தப்படி நியதியாகாரத்தைப் புசித்துப் பிராரத்த அனுபவத்தை நீக்கிக்கொண்டு, ஆகாமியத்தால் முயற்சியாகாரத்தைப் புசித்து, கரணேந்திரிய தேகத்தை வலுவுள்ளதாகச் செய்து கொண்டு, சன்மார்க்க சாதனத்தை அனுசரித்துச் சித்தி முத்தி இன்பங்களைப் பெறக் கடவரென்று கடவுள் விதித்திருக்கின்ற படியால், மனிதர்களுக்குப் பிராரத்த ஆகாரமும் ஆகாமிய முயற்சி ஆகாரமும் அவசியம் வேண்டுமென்று அறிய வேண்டும். மிருகம், பட்சி, ஊர்வன, தாபரம் என்கின்ற ஜீவதேகங்கள் தண்டனை நிமித்தம் விதித்த தேகங்களாதலால், பிராரத்த ஆகாரம் கடவுள் விதித்த வண்ணம் அருட்சக்தியால் தடைபடாமல் கொடுக்கப்படுமாகலில், ஆகாமிய ஆகாரம் சம்பாதிக்க வேண்டாமென்றறிய வேண்டும்.

  1. ஆனால் ஜீவகாருண்யம் எல்லா ஜீவர்களுக்கும் பொதுவென்று முதலில் குறிக்கப்பட்டது என்னை ? என்னில் –

ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் முக்கியமாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவில் பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும், பசியைப்போல் வேறு வகையினால் ஜீவகொலை நேரிடுவதானால், அந்த ஜீவகொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடை செய்து உயிர் பெறுவித்துச் சந்தோஷிப்பிக்க வேண்டுமென்றும், பிணி, பயம் முதலிய மற்ற ஏதுக்களால் ஜீவர்களுக்குத் துன்பம் நேரிடில் அத்துன்பங்கள் தங்களால் நீக்கத் தக்கவைகளாகில், நீக்கவேண்டுமென்றும், மிருகம், பறவை, ஊர்வன, தாபரம் முதலிய ஜீவர்களிடத்துப் பயத்தினால் வருந் துன்பத்தையும், கொலையினால் வருந் துன்பத்தையும் எவ்விதத்தும் நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றுள் துட்ட ஜீவர்களிடத்தும், சிறிது பயத்தினால் வருந்துன்ப மாத்திரமேயல்லாது கொலையினால் வருந்துன்பங்களைச் செய்யப்படாதென்றும், இவ்வகை முழுதும் ஜீவகாருண்யமேயாதலால், எல்லா உயிர்களிடத்தும் ஜீவகாருண்யம் வேண்டுமென்று கடவுளால் ஆணை செய்ததென்று அறியவேண்டும்.

  1. மனிதர்கள், தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகச் சம்பாதிக்கின்ற உயிர்களில் சில உயிர்கள், தாமச ஆகாரமாகிய மாமிச ஆகாரஞ் செய்வதனால், அவைகளுக்குப் பசியாற்று விக்கும் போது அந்த ஆகாரத்தைக் கொடுத்து ஆற்றுவிக்கப்படாதோ? என்னில் –

 ஒரு ஜீவனைக் கொன்று ஒரு ஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் ஜீவகாருண்ய ஒழுக்கமேயல்ல வென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இயற்கைக்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும்.

எல்லா ஜீவர்களும் இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும், கடவுள் இயற்கை விளக்கம் மறைபடும்போது ஜீவத்தன்மை இல்லாதபடியாலும், கடவுளியற்கை விளக்கமும், ஜீவனியற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபடாததாலும், கடவுளியற்கை விளக்கமும், ஜீவன் இயற்கை விளக்கமும், அந்தந்தத் தேகங்களிலும் விளங்குகின்றபடியாலும், ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவகாருண்ய வொழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்.

  1. புலி, சிங்கம் முதலிய மிருகங்கள் மற்றொரு ஜீவனைக் கொன்று தின்று தாமச ஆகாரத்தால் பசியாற்றி, திருப்தியின்பத்தை அடைந்து சந்தோஷிக்கின்றன. அந்த சந்தோஷம் கடவுளியற்கை விளக்க ஏகதேசமும், ஜீவன் இயற்கை விளக்க நிறைவும் எனவுங் கொள்ளக்கூடாதோ? என்னில் –

கூடாது. தாமச ஆகாரத்தால் பூரண சத்துவமாகிய கடவுளியற்கை விளக்க ஏகதேசமும், ஏகதேச்சத்துவமாகிய ஆன்ம இயற்கை விளக்கமும் விளங்கா; இருளால் ஒளி விளங்காதது போல்.

  1. இதைத் தாமச ஆகாரமென்பது என்னை ? எனில் –

கடவுள் விளக்கம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை ஆகாரமாதலால் தாமச ஆகாரமாயிற்று.

  1. இந்த ஆகாரத்தால் வந்த திருப்தி இன்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்கம்? என்னில் –

அனாதி பசுகரண மாயாவிளக்கம் என்று அறியவேண்டும்.

  1. பசு என்பது என்னை ? என்னில் –

ஆணவம், மாயை, கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசுவென்பது.

  1. அப்பசுவிற்கு விளக்கம் தோன்றுவது எப்படி? என்னில் –

சூரியனை மறைத்த மேகவண்ணத்திலுள்ள இருளினிடத்தும் சூரியப் பிரகாச விசேஷந் தோன்றுதலால், அவ்விருளும் விளக்கமாக வழங்குகின்றது. அதுபோல், அசுத்த மாயாகரணங்களுந் தாமச குணமும் இருள் வண்ணமுடைய வாயினும், தம்மால் மறைக்கப்பட்ட பரஜீவ விளக்க விசேஷத்தால் அசுத்த மாயாகரணமும், தாமச குணமும் விளக்கமாக வழங்குகின்றன. இதனால், தாமச ஆகாரத்தில் வரும் விளக்கம் அசுத்த மாயாகரண விளக்கமேயென்று அறிய வேண்டும்.

தாவரங்களும் உயிர்கள்தான்

  1. ஆனால் மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப் படுகின்றனவே, அவைகளை இம்சை செய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகாரமல்லவோ? அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ? என்னில் –

மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள் தான். அவைகளை இம்சை செய்து ஆகாரங் கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான், அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்த கரண சந்தோஷந்தான் , ஆனாலும் அப்படியல்ல.

மரம், புல், நெல் முதலான ஜீவர்கள் பரிசமென்கிற ஓரறிவுடைய ஜீவர்களாதலாலும், அவ்வுடம்பில் ஜீவ விளக்கம் ஒருசார் விளங்குதலாலும், / அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும், மற்ற வித்துக்கள் போல் சடமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறு செய்யாமல் அவ்வுயிர்களிடத்து உயிரில்லாமல், உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும், காய்களையும், கனிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து, காய், கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம், நகம், ரோமம் முதலியவைகளை வாங்கும்போது இம்சை உண்டாகாமைபோல், இம்சை உண்டாகாதபடியாலும், தாபர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக்கரணங்கள் விருத்தியில்லாத படியாலும், அது உயிர்க்கொலையுமல்ல; துன்பம் உண்டு பண்ணுவதுமல்ல. அதனால், அது ஜீவகாருண்ய விரோதமாகாது; அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் ஜீவ விளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகுமென்று அறியவேண்டும்.

தொடரும்…

ஞானத்திருவடி எனும் நூலுக்கு

மகான் கடுவெளிச்சித்தர் அருளிய ஆசிகாண்டம்

1. ஞானத்திருவடி தந்த அரங்கா போற்றி
ஞானமாய் வீற்றிருக்கும் அரசா போற்றி
ஞானிகளின் திருவடிபற்றிய தேசிகா போற்றி
ஞானியேநின் திருவடிகள் போற்றி போற்றி

2.போற்றியே கடுவெளி சித்தர் யானே
புகலவந்தேன் ஆசிதனை சுவடி வழியே
பார்காக்க அவதரித்த ஞான ஜோதியே
பல உயிர்க்கு ஆனந்தம் தந்தாய் நீயே

3.தந்தாயே தவப்பொருளே அரங்கா நீயே
தனித்திருந்தாய் பசித்திருந்தாய் விழித்திருந்தாய்
சிந்தையிலே தனிப்பெருங்கருணை கொண்டாய்
சித்தர் நீயே அருட்பெருஞ் சோதியுமானாய்

4.சோதியே கலியுகத்தை ஞானயுகமாய்
சித்தர்கள் வழியிலே மாற்றி வைத்தாய்
சோதி உம்மால் உயிர்களெல்லாம் உயர்ந்திருக்க
சித்தர்களும் மகிழ்ந்துமே அளித்தோம் ஆசி

5.ஆசியுண்டு உன் தொண்டர் அனைவருக்கும்
அருள் செய்வோம் உன்பக்தர் அனைவருக்கும்
ஆசியுண்டு அறம்புரியும் அனைவருக்கும்
அருள் உண்டு ஞானிகள் திருவடி பற்றியவர்க்கும்

6.பற்றினாய் ஞானிகளின் திருவடி தன்னை
பாருலகம் பற்றிட வழியைத் தந்தாய்
பற்றறுத்து ஞானிகளை தவத்தில் கண்டு
பாருலகம் சிறந்திட ஞானத்திருவடி நூலை

7.திருவடி நூலை திங்கள் தோறும் வெளியிடுவாயே
தெய்வநூல் திருமறைநூல் ஞானத்திருவடி நூலே
திருமகளின் கடாட்சம் தரும் அற்புத நூலே
திருவடி நூல் தொட்டவர்கள் கடாட்சம் பெற்றார்

 8. பெற்றிடுவார் ஞானசித்தி ஆசியுண்டு
பெரும்பேற்றை அடைந்தவராவார் ஆசியுண்டு
பெற்றுமே நாள்தோறும் நூலை படிப்போர்
பெருந்தவத்தை புரிந்திட்ட பலனை பெறுவார்

9.பெறுவார்கள் சித்தர்களின் ஆசிகள்யாவும்
பேரின்பம் உண்டு ஐயா ஆசியுண்டு
அருந்தவத்தை புரிந்திட்ட அரங்கராசனே
ஆனந்தம் தந்திட்ட ராஜ ராஜனே

10.அரசனே அகிலம்காக்க வந்தாய் ஐயா
அரங்கராச தேசிகராய் வீற்றிருந்தாய்
அரசாட்சி அருளாட்சி உந்தன் ஆட்சியே
அறமே உன் தவமாய் கண்டேன் யானே

11.கண்டேனே கடுவெளி என் கருத்துக்கள் தன்னை
கவனமுடன் வெளியிட்டு தவத்தை தந்தாய்
தொண்டரெல்லாம் படித்திட தவசித்தி ஓங்கும்
தவசியாவார் நூல்படித்தோர் அனைவரும்தானே

12.அனைவருக்கும் அருளுண்டு ஆசியுமுண்டு
அருள் கல்வி ஓங்கிவரும் ஆசியுண்டு
அனைவரும் நூல்பெற்று பயனடைய
ஆனந்தம் அடைந்திட என் ஆசியுண்டு

13.ஆசியுண்டு கடுவெளிச் சித்தர் வழங்கினேனே
அருள்பெற்ற அரங்கராஜ தேசிகர் வாழ்க
ஆசியுண்டு ஆசான் ஆசி அடைந்த அனைவருக்கும்
ஆசிதந்தேன் இப்பாகம் முற்றும் முற்றே.

– சுபம்

03.04.2009

சுவடி ஆசான் V.T.பரணீதரன்,

மகான் அகத்தியர் நாடி ஜோதிடர்,

செந்தண்ணீர்புரம், திருச்சி.

திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் – 94434 21935

மகான் கடுவெளிச்சித்தர் பாடல்களுக்கு

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அவர்கள் அருளிய அருளுரை

 தஞ்சை மாவட்டம் திருவையாறிலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் கடுவெளி என்ற ஓர் ஊர் உள்ளது. கடுவெளிச்சித்தரின் சொந்த ஊர் அந்த ஊராக இருந்தாலும் இருக்கலாம். இவரது பாடல்கள் எல்லாம் எளிய நடையில் பெரிய விஷயங்களை கொண்டிருக்கும். சாதாரண மக்களும் படித்து அறியக்கூடிய நடையில் எழுதுவார்.

 வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

– மகான் கடுவெளிச்சித்தர்.

வேதம் என்பது ஞானிகள் திருவடியை பூஜிப்பதுதான். காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் கடுவெளிச்சித்தரை “கடுவெளி தேவாய நம” என்று நாமஜெபம் செய்ய வேண்டும். அவர் ஆசிபெற வேண்டுமென்றால் உயிரை கொலை செய்து அந்த ஊனை உண்ணக்கூடாது. மாதம் ஒருவருக்கோ இருவருக்கோ பசித்த ஏழைக்கு பசியாற்ற வேண்டும். பசியாற்றக்கூடிய எண்ணம் உள்ளவன்தான் ஞானியாக முடியும். வேறெந்த சடங்குகள் செய்தாலும் ஞானியாக முடியாது. ஆக வேதமென்பது ஏழைகளுக்கு பசியாற்றி வைத்தலும், தினமும் நாமஜெபமாகிய பூஜை செய்தலுமாகும்.

இதை செய்து வந்தாலே முன்செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும். பாவம் என்பதே பிறர் பொருளை அபகரித்தல், பொய்சொல்லுதல், பிறர்மனை நாடுதல் இது போன்ற காரியங்கள் பாவச்செயல்களாகும் என சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. பூஜை செய்யச் செய்யதான் எது பாவம் எது புண்ணியம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பாவபுண்ணியத்தை அறிவதற்கே ஞானிகள் ஆசி இருக்க வேண்டும். ஞானிகள் அத்தனை பேரும் புண்ணியவான்களே. பாவம் செய்தால் ஞானியாக முடியாது. பக்தியும், தயவும் உடையவர்கள் தான் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியும். இதற்கும் ஞானிகள் ஆசி இருக்க வேண்டும். பூஜை செய்தாலும், அன்னதானம் செய்தலுமே வேதம் என்று அறிந்து செய்து வந்தால் மனம் தூய்மையாகும். மனத்தூய்மையே வேதமாகும். மனத்தூய்மை உள்ளவர்களுக்கு, எல்லா காரியங்களும் கைகூடும்; முக்தியும் பெறுவார்கள். முக்தி என்பது முற்று பெறுதல் ஆகும். ஆசான் கடுவெளிச்சித்தர் பாதத்தை பூசித்து ஆசிபெறுவதே வேதமாகும். இதுவே பிறப்பை ஒழிக்கும் மார்க்கமாகும். பிற உயிர்கள் மகிழும்படி நடப்பதும் வேதமாகும். இதை சிறப்பறிவு உள்ள மக்கள் தான் கடைப்பிடிக்க முடியும். அந்த சிறப்பறிவும் கடுவெளிச்சித்தர் ஆசியால்தான் உண்டாகும். கடுவெளிச்சித்தர் அவர்கள் “வேதவிதிப்படி நில்லு” என்று இந்த பாடலில் சொல்லியிருக்கிறார். ஆசான் கடுவெளிச்சித்தர் சொல்லியுள்ள படி நடந்து வந்தால் ஞானியாகலாம். மரணமில்லா பெருவாழ்வு பெறுவதுதான் உண்மையான வேதமாகும். ஒருவர் இனி பிறவாத மார்க்கத்தை அடைவதுதான் வேதவிதிப்படி நில்லு என்று சொல்வதின் அர்த்தமாகும்.

நல்லோர் நட்பை பெற்றவன், உண்மை பொருளறிந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வான். தன்னை அண்டியவர்களுக்கு சாதகமான நிலையை சொல்ல வேண்டும். அதாவது நல்ல வழியினை காட்ட வேண்டும். திருவருள் துணையில்லாமல், பெரியோர்கள் துணையில்லாமல் பொல்லாத கோபத்தை (கொடிய கோபத்தை ) தள்ள முடியாது. நல்லோர்கள் தொடர்பு இருப்பதால் மனம் எப்பொழுதும் சாந்தமாக இருக்கும். அவர்களுடைய கோபத்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள். கோபத்திற்கு ஆட்பட்டவன் நொடிப்பொழுதில் தீமை செய்துவிடுவான். ஆகவே சண்டாளப் பிறவிக்கு காரணமாகிவிடும். அடப்பாவி இவ்வளவு கொடுமை செய்து விட்டானே என்று பலர் சொல்லுவதுதான் சண்டாளமாகும். மகான் கடுவெளிச்சித்தர் போன்ற ஞானிகள் திருவடியை பூசித்தால்தான் சண்டாளக் கோபத்தை தள்ள முடியும். கோபம் பலபிறவிகளுக்கு காரணமாய் இருப்பதோடு மட்டுமல்லாது பொல்லாத வறுமை, தீராத நோய், எப்போதும் கொடுமையான சிந்தையுமாக இருக்கும். இதை ஆசான் கடுவெளிச்சித்தர் துணைக்கொண்டு வெல்லலாம்.

பிச்சையென் றொன்றுங்கே ளாதே – எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னையா ளாதே – சிவன்

இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே .

– மகான் கடுவெளிச்சித்தர்.

மகான் கடுவெளிச்சித்தரை தினமும் பூசிப்போர்க்கு உணவு, உடை, இருப்பிடம், நல்லோர் தொடர்பு எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவு, ஞானத்தை அடைய வேண்டுமென்கிற ஆர்வம் ஆகியன உண்டாகும். அவரைப் பூசிப்பவர்களுக்கு வறுமையென்ற பேச்சே இருக்காது. அதனால் யாரிடமும் சென்று பொருளுக்காக கையேந்த வேண்டிய அவசியமில்லை. இந்திரனுக்கு நிகரான செல்வத்தை பெறுவார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். எல்லோரும் பாராட்டும்படியான வாழ்வு அமையும். கடுவெளிச்சித்தரை பூசிப்பவர்களுக்கு காமம் இருக்காது. காமதேகம்தான் ஒருவனை நரகத்தில் தள்ளும். நரகமென்பதே கருவழியாகும். அந்த கருவழிக்கு செல்லமாட்டான்.

மெய்ஞ்ஞான பாதை என்பது அறிவாகும். அது இருவகை உண்டு. ஒன்று கடவுள் பக்தியாகும். மற்றொன்று மெய்ஞ்ஞானமாகும். மெய்ஞ்ஞானமென்பது இயற்கையால் படைக்கப்பட்ட இந்த உடம்பையும் உயிரையும் பற்றி அறிவதாகும். உடம்பாகிய சந்திரகலையையும், உயிராகிய சூரியகலையையும், சுழிமுனையாகிய புருவமத்தியில் சேர்ப்பதுதான் மெய்ஞ்ஞானமாகும். அது பிறவியை ஒழிக்கும். இதை அறிந்துகொள்ள மகான் கடுவெளிச்சித்தரின் ஆசிவேண்டும். இதுதான் உண்மையான மார்க்கத்தில் செல்லுவதாகும்.

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை

அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.

– கடுவெளிச்சித்தர்.

வெட்டவெளி என்பது இரண்டு வகை உண்டு. ஒன்று உலகத்திலுள்ள ஆகாயமாகும். மற்றொன்று புருவமத்தியாகும். இடகலையையும், பின்கலையையும், சுழிமுனையாகிய புருவமத்தியில் சேர்ப்பது பிறவியை ஒழிக்கும் மார்க்கமாகும். இது ஜென்மத்தை கடைத்தேற்றும், மரணமில்லா பெருவாழ்வை தரும். இதுவே சுத்த மெய்ஞானமாகும். இதை நாம் அறிந்து கொள்ள மகான் கடுவெளிச்சித்தரின் ஆசி பெறவேண்டும். ஆசி பெற்றோர்தான் இடகலையாகிய சந்திரகலையையும், பின்கலையாகிய சூரியகலையையும், சுழிமுனையாகிய (புருவமத்தி) வேதாந்த வெட்ட வெளியையும் அறிய முடியும். அஞ்ஞானமென்பது அறியாமையாகும். அதை நீக்கி, உன்னை சார்ந்தவர்களுக்கு அன்பு காட்டியும் ஞானத்தையும் போதிக்க வேண்டும்.

துர்நாற்றமுள்ள சுக்கில சுரோணிதத்தினால் வந்த இந்த தேகத்தை ஆசான் துணை கொண்டு சுத்தம் செய்வதே சுத்த மெய்ஞ்ஞானமாகும். அசுத்தமாகிய இந்த உலகத்தில் தோன்றிய தேகத்தை தவமுயற்சியால் சுத்தி செய்வதே சுத்த வேதாந்தம் எனப்படும் மெய்ஞ்ஞானமாகும்.

இவ்வாறு அசுத்த தேகத்தை ஆசான் துணையாலும், தவமுயற்சியாலும் சுத்தி செய்து வெற்றி கண்டவர்கள் தான் மெய்ஞானிகள்.

மெய்க்குரு சொற்கட வாதே – நன்மை

மென்மேலுஞ் செய்கை மிகவடக் காதே

பொய்க்கலை யால்நட வாதே – நல்ல

புத்தியைப் பொய்வழி தனில் நடத் தாதே.

– மகான் கடுவெளிச்சித்தர்.

முயன்று பொருளை ஈட்டியும், ஈட்டிய பொருளைக் கொண்டு மனைவிமக்கள், தாய்தந்தை, சுற்றத்தார் மற்றும் விருந்தை உபசரித்தல், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அன்னதானம் செய்தல் உலகமகா குருவும், கும்பமுனி என்றும் குருமுனி என்றும் சொல்லப்படுகின்ற அகத்தியரை “ஓம் அகத்தீசாய நம” என்று காலை மாலை நாமஜெபமாகிய பூஜை செய்ய வேண்டும். மேலும் ஆசான் உபதேசப்படி நடக்க வேண்டும். அப்படி நடந்தால் ஜென்மத்தை கடைத்தேற்றலாம் (வீடுபேறு அடையலாம்). ஒவ்வொரு நாளும் தன் கடமையை செம்மையாக செய்ய வேண்டும். ஞானமென்பது நெடிய பயணம். அவசரப்படுவதோ, உணர்ச்சி வசப்படுவதோ இத்துறைக்கு ஆகாது. எப்போது ஆசான் மனமிரங்கி அருள் செய்கிறாரோ அதுவரையில் தன் கடமையை செம்மையாக செய்ய வேண்டும்.

ஒருவன் முற்றுபெறும் வரையில் அதாவது சித்தி பெறும் வரையில் மிகமிக அடக்கமாக இருக்க வேண்டும். அடக்கம் இல்லாதவருக்கு முக்தியுமில்லை; மோட்சமுமில்லை. இத்துறையில் வெற்றி காண்பவர்கள் அடக்கமாகவே இருப்பார்கள். ஆரவாரங்கள் செய்தால் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாது. அதாவது முக்தி பெற முடியாது. அவ்வப்போது ஆசான் ஓலைச்சுவடி மூலம் உபதேசிப்பார் அல்லது சான்றோர்கள் மூலம் உபதேசம் செய்வார்.

மேற்சொல்லப்பட்ட அறிவுரைப்படி நடந்து கொள்வது நல்லதே. மனிதனுக்குதான் மரணமில்லா பெருவாழ்வும், மோட்ச லாபமும் உண்டு. இதற்கு குரு அருள் மிகமிக அவசியம். குருவின் உபதேசத்தை மறக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தினமும் எடுத்துக் கொண்ட லட்சியத்திற்காக பாடுபட வேண்டும். ஞானவாழ்வு பெற தொடர்ந்து பாடுபடவேண்டும். ஒவ்வொரு நாளும் ஆசான் உபதேசப்படி தவறாமல் நடக்க வேண்டும்.

பொய்கலை, மெய்கலை… இடகலை, பின்கலை, சுழிமுனை என்பது மெய்கலை அதாவது இடகலையாகிய சந்திரகலையையும், பின்கலையாகிய சூரியகலையையும் அறிந்து கொள்வதுதான் மெய்கலை. இது குரு உபதேசித்தால் அன்றி அறிந்து கொள்ள முடியாது. பொய்கலை என்பது பிராணாயாமம் அல்லது யோகம் என்ற பெயரில் செய்வதெல்லாம் பிறவியை ஒழிக்க முடியாது. தக்க ஆசானை நாடி மெய்கலையை அறிந்து கொள்ள வேண்டும். இது உண்மை பொருள் அறிந்த ஞானிகள் தான் மெய்கலை எது? பொய்கலை எது? என்று அறிய முடியும். உண்மைபொருள் அறிந்த ஆசான் தொடர்பு வேண்டும். அப்படி உண்மை பொருளறிந்த ஞானி கிடைக்காவிட்டால் “ஓம் அகத்தீசாய நம” என்று நாமஜெபம் செய்தால் அவரே நமக்கு உணர்த்துவார்.

ஆகவே இத்துறையில் வெற்றி கண்டவர்கள் அத்தனைபேரும் குரு அருள் குரு அகத்தீசன் ஆசிபெற்றே சித்தி பெற்றிருக்கிறார்கள். நாமும் அவரது நாமத்தை சொல்லி பூஜைசெய்ய பூஜைசெய்ய முன் செய்த பாவங்கள் எல்லாம் பொடிப்பட்டு போகும். ஞானத்திற்குரிய சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு உள்ள மக்கள்தான் குரு அருள் வேண்டுமென்று சொல்வார்கள். ஒரு சிலர் குரு அருள் தேவையில்லை நானே படித்து ஞானத்தை தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து இருப்பார்கள் அல்லது வேடதாரிகள் அதாவது பொய்ஞானிகளிடம் அகப்பட்டு மனைவி மக்களை இழந்து தன்னால் சேகரிக்கப்பட்ட பொருளையெல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டு நரகத்திற்கு போவான். பொய்குருவிற்கு பொருளுதவி செய்தால் பொருளைப் பெற்றவனும் நரகத்திற்கு போவான்; பொருளை கொடுத்தவனும் நரகத்திற்கு போவான். பொருள் கொடுத்தவன் ஏன் நரகத்திற்கு போவானென்றால் அதுபோன்ற பாவிகளுக்கு பொருளுதவி செய்து அவன் வாழ்வதற்கு காரணமாக இருப்பதால்தான் இவனும் நரகத்திற்கு செல்கிறான். எனவே குருவாக்கை மீறாமல் நடந்து கொள்வதே மோட்சலாபம் தரும்.

முற்றுப்பெற்ற முனிவரும் குருமுனியும் கேட்டதெல்லாம் தரக்கூடிய வல்லவருமான மகான் அகத்தீசரை மறவாது பூஜை செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள் நல்வினை உள்ளவர்கள்.

.கூட வருவதொன் றில்லை – புழுக்

கூடெடுத் திங்கள் உலைவதே தொல்லை

தேடரு மோட்சம் தெல்லை – அதைத்

தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.

– மகான் கடுவெளிச்சித்தர்.

பலகோடி அணுக்களால் ஆன இந்த உடம்பை அழியாது எப்போதும் இருக்கும் என்று நம்பி அங்கும் இங்கும் அலைந்து காலத்தை வீணாக்காதே. தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான். தலைவனை அறிந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். தன்னையறிந்தும் தலைவனையறிந்தும் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்கிறான். மற்றவர்கள் எல்லாம் பிறவிக்கடலாகிய நரகத்தில் வீழ்வார்கள். இதை அறியாது கோடிக்கணக்கான பொருள் சேர்ப்பதால் என்ன பலனை அடைய முடியும். குரு அருள் உள்ளவர்கள் தான் பொருளை ஈட்டி, தர்மம் செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள். பொருள் ஒரு காலத்தில் இல்லாது போய்விடும். செய்த தர்மமும் தவமும் மட்டுமே நிலைத்து நிற்கும். பொருளை பெற்றவர்கள் பொருள் இருக்கும்போதே அறப்பணிகள் செய்து மோட்ஷத்தை அடைய வேண்டும். அறிவுள்ளவரிடம் பொருள் சேர்ந்தால் அப்பொருளைக் கொண்டு பிறவியை ஒழித்து (அறுத்து) கொள்வான்; ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான்.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த

ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு

முந்தி வருந்திநீ தேடு – அந்த

மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.

– மகான் கடுவெளிச்சித்தர்.

பஞ்சபூதத்தால் ஆன இந்த உடம்புதான் ஞானவீடு என்பது. இதை அறிந்து கொண்டவர்கள் ஞானமடைவார்கள். ஒருவர் ஜென்மத்தை கடைத்தேற்ற இந்த உடம்பை அறிந்து கொண்டாலே எந்த பஞ்சபூதத்தினால் ஆன உடம்போ அதே பஞ்சபூதம் துணைக்கொண்டு ஞானம் பெற்று ஞானவாழ்வை அடைவார்கள். உடம்புதான் மோட்சத்திற்கு சாதனமாக இருக்கிறது. பஞ்ச பூதமாகிய உடம்பை அறியாவிட்டால் முக்தி பெறுவது கடினம். இதைப்பற்றி அறிந்தவர்களிடம் சென்று ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். பஞ்ச பூதம்தான் ஞானத்திற்கு அடிப்படை என்பதை அறிந்து முக்திபெற வேண்டும். ஒருவன் வீடுபேறு அடைகிறான் என்றால் இந்த அடிப்படையை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஞானிகள் ஆசி இல்லாமல் பஞ்சபூதத்தை அறியவோ அதை வசப்படுத்தவோ முடியாது. எந்த பஞ்சபூதம் நம்மை தோற்றுவித்ததோ அதே பஞ்சபூதம்தான் பிறவியை ஒழிப்பதற்கு காரணமாய் உள்ளது

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை

ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை

கள்ளப் புலனென்னும் காட்டை வெட்டிக்

கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.

– மகான் கடுவெளிச்சித்தர்.

அறிந்தவர்களுக்கு இந்த உடம்பு பஞ்ச பூதத்தால் ஆனது என்றாலும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்ற நான்குதான் உடல் இயக்கத்திற்கு காரணமாய் உள்ளது. பிருதிவி என்பது மண், அப்பு என்பது நீர், தேயு என்பது அக்கினி, வாயு என்பது காற்று, ஆகாயம் என்ற பூதம்தான் இந்த நான்கையும் இயக்கி வருகிறது. ஆகாயம் என்ற பூதம் அறிவாக உள்ளது. உடம்பை அறியாதவர்களுக்கு உடம்பே பகையாக மாறிவிடும். அறிந்தவர்களுக்கு அதுவே ஞானசாதனமாக மாறிவிடும். ஆக மும்மலத்தால் ஆன இந்த உடம்பை வெல்வதே பிறவியை ஒழிக்கும். இது நம் அறிவிற்கு எட்டாத ஒன்று. இதை ஆசான் (குரு) துணைகொண்டுதான் அறியமுடியும். குரு அருள் பெற்றவர்கள் இதை அறிந்துகொள்வார்கள். இதை அறிந்து கொள்ள தடையாய் இருப்பது ஐம்புலன்களேயாம். அதை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும்.

காசிக்கோ டில்வினைபோமோ – அந்தக்

கங்கையா டில்கதி தானுமுண் டாமோ

பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல

பேதம் பிறப்பது போற்றினும் போமோ.

– மகான் கடுவெளிச்சித்தர்.

நல்வினை, தீவினையைப்பற்றி அறிந்தவர்கள் தான் ஆசான் துணைகொண்டு தீவினையை நீக்கி நல்வினையை பெருக்கிக்கொள்வார்கள். நல்வினை, தீவினையைப் பற்றி அறிந்தவர்கள் புனிதநீராடுவதால் மட்டும் வினை நீங்கிவிடாது என்பதை தெரிந்து கொள்வார்கள். குரு அருள் பெற்றவர்கள் தான் எந்த புனித தீர்த்தத்திலும் மூழ்குவதால் வினைதீராது என்பதை அறிந்துகொள்வார்கள். நல்வினை, தீவினைகள் பற்றி அறிந்துகொள்ளவும், நல்வினையை பெருக்கிக் கொள்ளவும் குரு அருள்தான் முக்கியம் என்று அறிந்து எந்த தீர்த்தத்திலும் மூழ்க மாட்டார்கள். குரு அருள் என்ற தீர்த்தமே முன் செய்த பாவத்தை நீக்கி மோட்சலாபம் தரும். குருவின் பாதமே புனித தீர்த்தமாகும். குரு அருள் பெற்றவர்கள் பிறவியை ஒழிப்பார்கள். அங்ஙனம் குரு அருள் பெறாதவர்கள் பிறவியை ஒழிக்கமாட்டார்கள். குரு அருள்தான் பிறவியை ஒழிக்க முக்கியம் என்று அறிவது சிறப்பறிவாகும். அவ்வாறு அறிந்து குருவின் திருவடியை பூசித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள் சிறப்பறிவு பெற்றவர்கள்.

பொய்யாகப் பாராட்டுங் கோலம் – எல்லாம்

போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போங் காலம்

மெய்யாக வேசுத்த சாலம் – பாரில்

மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.

– மகான் கடுவெளிச்சித்தர்.

ஞானிகள் போல் வேடம் தரிப்பதால் பிறவியை போக்க முடியாது. பிறவியை வெல்வதற்கு உண்மை பொருள் அறிய வேண்டும். பிறவியை ஒழிக்க கற்றுக் கொண்டவர்கள் வேடத்தில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். பொய்வேடம் தரித்து பொருளை ஈட்டுபவர்கள் நரகத்தை அடைவார்கள். ஆகவே குரு அருள் இருந்தால் பொய்வேடத்தில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். பொய் வேடத்தால் எந்த பலனுமில்லை என்று அறிந்து கொள்வார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய
இராமலிங்க சுவாமிகள் அருளிய
அருட்பாவின் அமுத கலசமான
ஜீவகாருண்ய ஒழுக்கம்
என்னும் தெய்வீக நூலை யார் படிக்கிறார்களோ அவர் ஞானியாவார் என்பது சத்தியம்.

– குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

ஞானிகள் திருஉருவப்படங்கள் மற்றும்
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர்,
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,  
ஓங்காரக்குடில், துறையூர். 04327-255784, செல்: 98947 55784  

அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா! ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

அன்பன் – இரா.மாதவன், 98424 55661.  

வாசகர் கடிதங்கள்

மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவரின் அருளாசியுடனும், ஓங்காரக்குடில் ஆசானின் ஆன்மீக விளக்க உரைகளுடனும் வெளிவரும் “ஞானத்திருவடி” மாத இதழ் படிக்கப் படிக்க மனதுக்கு பெரும் இதம்.

வாழ்க்கை என்றால் இன்னதென்று அறியாமல் அறியாமையில் உழன்று கொண்டு இருக்கும் மக்களின் ஞானக்கண்களை ”ஞானத்திருவடி” திறந்து வைக்கிறது என்றால் அது மிகையல்ல.

அன்புடன்

ரேவதி பாலு,

சென்னை – 41.

சித்தர்களின் பூஞ்சோலை, துறையூரிலுள்ள ஓங்காரக்குடிலே ஆகும். நித்தம் சித்தர்களுக்கு வழிபாடுகள் அங்கு சிறப்பாக நன்கு நடக்கும். சித்தர்களின் வருகையைக் காற்றில் மிதந்து வரும் நறுமணமே நமக்கு உணர்த்தும். சத்தமின்றி ஆரவாரமின்றி ஏழையர்களின் பசிப்பிணியை அங்கு நடக்கும் நற்செயல்கள் போக்குவிக்கும். உத்தமர் வாழும் ஞானி ரெங்கராஜ தேசிகரின் ஆன்மீக சிறப்புரை நம்மைத் தூய்மைப்படுத்தும். சத்தியப் பொருளை அடைவதற்கும், உடல், மனத்தூய்மை பெறுவதற்கும் அவ்வுரை நமக்கு வழிகாட்டும். எத்திக்கும் எல்லாமான இறைவன் உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாய் குடிப்புக வேண்டுமானால், புத்துணர்ச்சி பெறுவீர், புத்தனாக மாறுவீர், உள்ளத்தைச் சித்தர்களின் குடிலாக மாற்றுவீர்.

நல்வித்துதான் மண்ணில் புதைந்து நீர், வெப்பம், காற்றோட்டம் கலந்தால்தான் விருட்சமாகும். முத்து முத்தான தேசிகரின் ஞானக்கருத்துக்கள் மும்மலங்களை அகற்றி நம்மை உய்விக்கும். சத்சித் ஆனந்த மெய்ப்பொருளை அடைவதற்கு உலகில் இதைவிட சிறந்த மார்க்கமில்லை.

எத்தனை எத்தனை பக்தி ஞான மார்க்கங்கள் உலகில் உள்ளனவோ அவைகளின் ஞான சாற்றை அத்தனையும் பிழிந்து ஞானத்திருவடி ஆன்மீக இதழ்மூலம் தேசிகர் நமக்கு அருளுகின்றார். சுத்த வெளி தெய்வமே சித்தர்களாக, ஞானிகளாக உருவெடுத்து வந்ததை நன்கு உணர்ந்தவர். வித்தையில் சிறந்த வித்தை பிரம்மவித்தை, இதைவிட சிறந்த மார்க்கம் உலகில் வேறு உண்டோ . அகத்தியர் சன்மார்க்கத்தில் சேர்ந்து தூய்மை அடைவீர் தானம் தவத்தில் சிறப்படைவீர். ஜெகத்தினை அன்பால் வென்றிடலாம், நகமும் சதையும் போல இறைவனுடன் இருந்திடலாம்.

அன்பன்
M.கணேசன்,
திருவொற்றியூர், சென்னை -19

சந்தா புதுப்பித்தல்

அன்புள்ள சந்தாதாரர்கள் அனைவருக்கும் ஞானத்திருவடி மாத இதழின் சார்பாக அன்பான வணக்கங்கள்.

கடந்த ஓராண்டுகாலமாக ஓங்கரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கையாகிய ஞானத்திருவடி மாத இதழை தொடர்ந்து படித்தும், பிறருக்கு அறிமுகம் செய்தும் வரும் தங்களின் மேலான உதவிகளுக்கு நன்றிகள் பல பல.

சந்தாவை புதுப்பிக்க உங்கள் சந்தா எண் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவும். சந்தாவை நேரிலோ , M.O . அல்லது D.D. மூலமாகவோ செலுத்தலாம். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

சந்தாவை புதுப்பித்தவர்கள் இச்செய்தியை பொருட்படுத்த வேண்டாம்.

ஞானத்திருவடி – மாத இதழ்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை ஓங்காரக்குடில்,
113-நகர் விரிவாக்கம்,
துறையூர் – 621010.
திருச்சி மாவட்டம்.

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய

ஏழைகளுக்குப் பசியாற்றிவைத்தால் வரும் நன்மைகள்

297) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஜென்மத்தை கடைத்தேற்ற
வேண்டுமென்றால் பாவ புண்ணியம் உண்டு என்றும், கடவுள் உண்டு
என்றும் நம்பவேண்டும் என்பதை அறியலாம். 

298) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் உடம்பே உண்மையும்,
பொய்யுமாக இருப்பதை அறிந்து ஆசான் அகத்தீசரின் துணைக்கொண்டு பொய்யை நீக்கி,மெய்யை நிலைப்படுத்திக்கொள்ளுகின்ற சிறப்பறிவு பெறலாம்.
 
299) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அசுத்தமாயை, சுத்தமாயை,
சுத்தமகாமாயை அறிந்துகொள்ளலாம். 

300) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சித்தர்களின் நூல்களில் உள்ள
நுண்பொருளை உணரமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம். 

301) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தில்லை அம்பலவாணனின்
திருநடனத்தை புருவ மத்தியில் காணலாம். 

302) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தமிழை கற்றால்தான் எளிதில்
ஞானத்தை அறிந்துகொள்ளமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
 
303) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மகான் அகத்தீசரை
நினைத்தால் அவர் அக்கணமே வந்து அருள் செய்வார் என்று
அறிந்துகொள்ளலாம்.
 
304) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் திருவிளக்கு ஜோதியில்
அகத்தீசர் நாமத்தைச்சொல்லி திருவிளக்கை பார்த்தால் அந்த ஜோதியில் மகான் அகத்தீசர் தோன்றி அருள் செய்வார் என்பதை
அறிந்துகொள்ளலாம்.
 
305) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நாம் சேர்க்கும் பொருளே
பிறவிப்பிணிக்கு மருந்தாகும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
 
306) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கிடைத்தற்கரிய
மானுட தேகத்தின் பெருமையை அறிந்துகொள்ளலாம்.
 
307) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நன்றி மறப்பது குற்றம்தான்,
இருப்பினும் அது மன்னிக்கப்படும். ஆனால் பல்வேறு உதவிகளை மனமுவந்து செய்தவருக்கே தீமைகள் செய்தால், எழுபிறப்புக்கும்
நரகம் வந்துசேரும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
 
308) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மகத்தான பஞ்சவர்ணம்
கண்டவருக்கு வறுமை இல்லை என்பதனை அறிந்துகொள்ளலாம்.

309)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கையும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

310) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அகத்தீசர் நாம ஜெபமே தவம் என்று அறிந்துகொள்ளலாம்.
 
311)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அகத்தீசர் அன்றி ஞானவாழ்வு தருவதற்கு வேறுயாருக்கும் ஆற்றல் இல்லை என்பதை
அறிந்துகொள்ளலாம்.

312) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அகத்தீசர் நாமத்தை சொல்லவும்,
அவர் திருவடியை பூஜிக்கவும் புண்ணியம் செய்தவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம். 

313)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கோபமே நொடிப்பொழுதில் நம்மை பாவியாக்கிவிடும் என்றும் அதுவே நமக்கு எமனாக மாறும்
என்பதையும் அறிந்துகொள்ளலாம். 

314) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மனமாசையும் அதை நீக்கவும்
அறிந்துகொள்ளலாம். 

315) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தூய மனமே இறைவன் வாழும்
இடம் என்று அறிந்துகொள்ளலாம். 

316) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தூய மனம் பெறுவதற்கு சுத்த சைவ உணவும், ஆசான் அகத்தீசர் திருவடி பூஜையும்தான் என்று அறிந்துகொள்ளலாம்.

317)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பாவிகளுக்கு இவ்வுலகமே நரகமாக மாறும் என்பதை அறியலாம். 

318)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சிவனடியார்களுக்கு உதவுவதே
சிவபூஜை என்று அறிந்து கொள்ளலாம். 

319) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஏழையின் பசியைத் தீர்ப்பதே
இறைவனுக்குச் செய்யும் நைவேத்யம் என்பதை அறிந்துகொள்ளலாம். 

320) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நமக்கு வந்துள்ள பொருள்
எல்லாம் கடவுளால் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து அதை இறுகப் பற்றிக்கொள்ளாது அறப்பணிகள் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டும் என்ற சிறப்பறிவைப் பெறலாம். 

321)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சிவனை அடையவேண்டும் என்றால் சிவனடியார்களிடம் ஆசிபெறவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
அடுத்த இதழில் தொடரும்.

கவனகர்.
முழக்கம்
(மாத இதழ் - ரூ. 10/-) 
கவன கதின்
●	ஆழமான ஆன்மீக விளக்கங்கள் 
●	அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள். 
●	விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச் சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதழ்.

தமிழர்களின் வாழ்க்கைப் பாதையை 
வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதழ்
கவனகர் முழக்கம்

ஆசிரியர் :
“பதினாறு கவனகர்"
திருக்குறள் 
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு .. 
4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு, 
நீலாங்கரை, சென்னை -41. (0) 044-24490826.
மற்றும் 
66, ராமசாமி வீதி, சாய்பாபா காலனி, 
கே.கே. புதூர், கோவை-38. (0) 0422-2441136. 
தினசரி காலை 7.30 மணிக்கு மெகா டி.வி.யில் 
கவனகரின் எழுச்சியுரையை கேட்டு பயன்பெறுவீர்.


"சிவாய ரெங்கராஜ தேசிகாய நம" 
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி
- குறள் 226.

.குருவருள் வேண்டி 
கணேஷ் ஹார்டுவேர்ஸ்
& அலுமினியம், 
No.72A - 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை - 600 026. 
Cell : 98400 - 20828. 0 044 - 23651284, 23652568.)

அன்னதானம் செய்தால் 
துன்பங்கள் தீரும்"
சுந்தரானந்தர் எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை - 600 026.
044-24720499, 23721160.

அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர் 
டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ்
பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால் எதிரில், 
துறையூர்.
JOHNSON TILES
REGENCY
PARRYWARE
NEYCER
குரு அருள் வேண்டி . . 
ASR.ராஜா98431 58696

S.திருமுகம் 98435 68696
லட்சுமி கிரில் டிசைன்ஸ்
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும், மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 

அருட்சிவ நெறி சார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி 
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி 
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி 
ஈனம் இன் றிகபரத்து இரண்டின் மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி - 
ANU BUILDERSS Builders & Estates

Plot No.66, 2nd Main Road,
 V.G.P. Babu Nagar, Medavakkam,
Chennai - 601 302. 
Phone: 2277 0495,
Cell : 94440 70495,
 E-mail: anubuilders@yahoo.com

அகத்தியர் துணை 
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு 
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்

 ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின் நித்திய செயல்பாடுகள்

காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்) 
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம். 
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் 
காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம் 
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம் 
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் 
மாலை 6.30 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம் ) ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம் 
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்.

 

 ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
S.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம். செல்: 98430 11484.
ஆசிரியர் – இரா.மாதவன்.

அச்சிட்டோர் : இராம.தொல்காப்பியன்,  
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.  

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 469
  • Total Visits: 270238
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்